நீட் தேர்வு விவகாரத்தில் அநீதி இழைக்கப்பட்ட தமிழக மாணவர்களும், பெற்றோரும் கொந்தளித்துக் கொண்டு இருக்கின்றனர். மாணவர்கள் நீதிமன்றங்களை நாடியும் கூட அவர்களுக்கு நியாயம் கிடைக்கவில்லை.
பாடத்திட்டத்தை மாற்றாது ஏன்?
மாநிலப் பாடத்திட்டத்தில் 12-ம் வகுப்பில் படித்த மாணவி கிருத்திகா 1184 மதிப்பெண் பெற்றிருக்கிறார். அவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு வழக்குத் தொடர்ந்தார். அதில், தம்மை மருத்துவ மாணவர் சேர்க்கை கவுன்சலிங்கில் பங்கேற்க அனுமதி அளிக்கும்படி கோரியிருந்தார். இது தொடர்பான வழக்கு விசாரணையின்போது கருத்துத் தெரிவித்த நீதிபதி கிருபாகரன், ''கடந்த பத்து ஆண்டுகளாக மாநிலப் பாடத்திட்டம் மாற்றப்படாமல் இருக்கிறது. கற்பித்தலில் தரம் இன்மை நிலவுகிறது" என்று கூறி இருக்கிறார். இது குறித்து கல்வியாளர்கள் என்ன நினைக்கிறார்கள்?
மாநில பாடத்திட்டம்தான் தரமானது
கல்வியாளர் வசந்தி தேவியிடம் பேசினோம்,"மாநிலப் பாடத்திட்டம், சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்துக்கு சற்றும் குறைந்தது அல்ல. டாக்டர் எஸ்.எஸ் ராஜகோபால் மாநில பாடத் திட்டத்தையும், சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தையும் ஆய்வு செய்தார். ஆய்வின் முடிவில், சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தை விட மாநில பாடத்திட்டத்தின் தரம் உயர்வாக இருக்கிறது என்றார். உயிரியியல் பாடத்திட்டமும் தரமாக இருப்பதாகக் கூறினார்.
எந்தப் பாடத்திட்டத்தில் மாணவர்கள் படிக்கிறார்களோ, அதை அடிப்படையாகக் கொண்டு நுழைவுத்தேர்வுக்கானக் கேள்விதாள் தயாரிக்க வேண்டும். மேற்கு வங்க பாடத்திட்டத்தில் கேள்வி கேட்டால், சி.பி.எஸ்.இ மாணவர்களால் அதிக மதிப்பெண்கள் பெறமுடியாது. சி.பி.எஸ்.இ மாணவர்களுக்கு மாநில பாடத்திட்டத்தில் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட கேள்விகளை நீட் தேர்வுக்குக் கொடுத்திருந்தால், நிச்சயமாக அவர்கள் தேர்ச்சி பெற முடியாது.
கற்பித்தலில் மாற்றம் தேவை
அதே போல கற்பிக்கும் முறையிலும் பெரிய மாற்றங்கள் கொண்டு வர வேண்டும். கிராமப் புற மாணவர்களால் நீட் தேர்வு எழுத முடியாது என்று சொல்பவர்களுக்கான நான் ஒரு கேள்வியைக் கேட்க விரும்புகிறேன். மாநிலப் பாடத்தித்தின் கீழ் அரசுப் பள்ளிகளில் படித்த கிராமப்புற மாணவர்களில் எத்தனை பேருக்கு தமிழக மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைத்தது. சமூக அநீதி என்று சொல்கிறார்கள். தமிழ் வழியில் படித்து நல்ல மதிப்பெண் பெற்ற மாணவர்களில் எத்தனை பேருக்கு இதற்கு முந்தைய ஆண்டுகளில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைத்திருக்கிறது.
சமூக அநீதி என்று சொல்கிறார்கள். இதற்கு முன்பு, மாநில பாடத்தில் தேர்வு எழுதியவர்களில் கிராமப்புற மாணவர்கள், தமிழ் மீடியம் படித்த மாணவர்கள் எத்தனை பேர் மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்திருக்கிறார்கள். கடந்த இரண்டு ஆண்டுகளில் இந்தப் பிண்ணனியில் படித்த 24 பேர் மட்டுத்தான் மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்தனர். மாநில பாடத்திட்ட மாணவர்கள், கணிதத்தைக் கூட உருப்போட்டு படிக்கின்றனர். இந்த நிலையில் மாற்றம் வேண்டும்.
நீட் மட்டும் காரணம் அல்ல
எனவே, நீட் தேர்வினால் மட்டுமே கிராமப்புற மாணவர்கள், தமிழில் படித்த மாணவர்களுக்கு அநீதி ஏற்பட்டு விட்டது என்று சொல்ல முடியாது. அதற்கு பல காரணிகள் இருக்கின்றன. அதே நேரத்தில் நீட் கூடாது என்பதைத் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன். தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள்தான் ஆயிரகணக்கான ரூபாய்கள் கொடுத்து கோச்சிங் சென்டர்களில் சேர்ந்து நீட் தேர்வு எழுதுகிறார்கள். நீட் தேர்வு இல்லாமல் போய்விட்டால், கோச்சிங் சென்டர்களுக்கு எதிர்காலம் இல்லை. எனவேதான் அவர்கள் நீட் வேண்டும் என்று சொல்கிறார்கள். இதில் அவர்கள் மாணவர்களின் நிலையைக் கருத்தில் கொள்வதில்லை. உண்மையாகவே நீதி கிடைக்க வேண்டும் என்றால் தமிழகத்தில் கோச்சிங் சென்டர்களே இருக்கக்கூடாது. நாமக்கல் கோழிப்பண்ணைகளில் கோழிகள் உற்பத்தி செய்யப்படுவது போல இல்லாமல், கோச்சிங் இல்லாமல் அனைத்து மாணவர்களும் படித்து அதிக மதிப்பெண்கள் பெறும்படி 11, 12-ம் வகுப்புகளின் பாடத்திட்டத்தை மாற்றி அமைக்க வேண்டும். இப்போது இருக்கும் பாடத்திட்டம் சி.பி.எஸ்.இ-யை விட தரம் தாழ்ந்தது என்று நாங்கள் நினைக்கவில்லை" என்றார்.
பொதுப் பள்ளிகளுக்கான மாநில மேடை அமைப்பின் பொதுச்செயலாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபுவிடம் பேசினோம். " நீட் தொடர்பான வழக்கில் முதலில் நீதிமன்றம் ஆதரவாக க் கருத்துச் சொன்னது. மாணவர்கள் பாதிக்கப்படாதவாறு ஒரு புதிய பார்முலாவுடன் வாருங்கள் என்று நீதிமன்றம் சொன்னது.
முரண்பட்ட தீர்ப்பு
ஆனால், நீட் தேர்வு காரணமாக ஒரு பகுதி மக்களுக்கு பாதிப்பு இல்லை என்று தெரிய வந்த உடன், இறுதித் தீர்ப்பில் நீட்டை நடைமுறைப் படுத்துங்கள் என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் சொல்லி விட்டனர். இந்த சூழலில் மாநிலப் பாடத்திட்டம் தரம் இல்லை என்றெல்லாம் சொல்வதை ஏற்றுக் கொள்ள முடியாது. பத்து வருடங்களுக்கு முன்புதான் சி.பி.எஸ்.இ பாடத்திட்டம் எழுதப்பட்டது. தமிழக அரசு பாடத்திட்டமும் 10 ஆண்டுகளுக்கு முன்பு திருத்தி எழுதப்பட்டதுதான்" என்றார்.
0 comments: