நெடுந்தீவு அருகே மீன்பிடித்துகொண்டிருந்த 12 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ள சம்பவம் தமிழக மீனவர்களிடையே மீண்டும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
பொதுவாக ராமேசுவரத்தில் இருந்து 700-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்வார்கள். ஆனால் இலங்கை கடற்படையினரின் தொடர் தொல்லைகளால் நேற்று 300 விசைப்படகுகளில் மட்டுமே மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.
நடுக்கடலில் அவர்கள் மீன்பிடித்து கொண்டிருந்தபோது, இலங்கை கடற்படையினர் ரோந்து கப்பல்களில் அங்கு வந்தனர்.
அவர்கள் மீனவர்களை பார்த்ததும் அங்கிருந்து செல்லுமாறு கூறினர். மேலும் மீனவர்கள் மீது தாக்குதல் நடத்திய அவர்கள், ராமேசுவரம் மல்லிகைநகர் துரை என்பவருக்கு சொந்தமான படகு உள்ளிட்ட 2 படகுகளையும், அதில் இருந்த 12 மீனவர்களையும் சிறைபிடித்து கொண்டு சென்றனர்.
பின்னர் அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்துவதற்காக இலங்கை காங்கேசன் துறைமுகத்திற்கு அழைத்துச்சென்றனர்.
ஏற்கனவே கடந்த வாரம்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் இலங்கை சென்றிருந்த நிலையில் 70 மீனவர்கள் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.
இந்நிலையில் 12 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் பிடித்துச் சென்றது, மீனவர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
0 comments: