நீட் தேர்வை எதிர்த்தும், தமிழக மாணவி அனிதாவின் மரணத்திற்கு நியாயம் கேட்டும் சென்னை பல்கலைக்கழக மாணவர்கள் இரண்டாவது நாளாக, உள்ளிருப்பு போரட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
நீட் தேர்வின் காரணமாக தமிழக மாணவி அனிதாவின் தற்கொலை மாணவர்கள் மத்தியிலும், அரசியல் தலைவர்கள் மத்தியிலும் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. நீட்டுக்கான நீதி வேண்டி நேற்று முதல் மாணவர்களும், பல்வேறு சமூக அமைப்பைச் சார்ந்தவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக சென்னை பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 6 மாணவர்கள் நேற்று இரவு உள்ளிருப்பு போராட்டத்தை தொடங்கினர்.
சென்னை பல்கலைக்கழகத்தின் பல்வேறு துறைகளில் பயின்று வரும் இந்த ஆறு மாணவர்களும் பல்கலைக்கழகத்திலுள்ள சேப்பாக்கம் வளாகத்தில் அமர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தை தொடர்கின்றனர்.
போரட்டத்தை கைவிடுமாறு பல்கலைக்கழக நிர்வாகம் வற்புறுத்தியும் மாணவர்கள் அதை கேட்க மறுத்து விட்டனர். இதைத் தொடர்ந்து மாணவர்களை அப்புறப்படுத்துவதற்கு, பல்கலைக்கழகம் நிர்வாகம் காவல் துறையின் ஒத்துழைப்பை நாடியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
போராட்டம் பெரிதாகாமல் தடுக்க, பொதுமக்கள் பல்கலைக்கழகத்தின் உள்ளே செல்வதற்கு அனுமதிக்கப்படவில்லை. அடையாள அட்டை வைத்திருந்த மாணவர்கள் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர்.
சென்னை பல்கலைக்கழகத்தின் அத்தனை வாயில்களும் அடைக்கப்பட்டுள்ளது. மாணவி அனிதாவின் மரணம் தமிழக மாணவர்களிடையே பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளதால் நாளை முதல் போராட்டம் பெரிதாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
0 comments: