Monday, 11 September 2017

காணாமல் போன கடல்... ஆச்சரிய நிகழ்வால், அதிர்ச்சியில் மக்கள்!

ஒரு நகைச்சுவையில் நடிகர் வைகை புயல் வடிவேலு, என் கிணத்த காணோம் என புகார் அளித்த காமெடி நம் அனைவருக்கும் பரிச்சயமான ஒன்று.

ஆனால், சமீபத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய இர்மா எனும் சூறாவளியால் ஒரு கடல் காணாமல் போயிருக்கிறது என்றால், உங்களால் நம்ப முடியுமா?

நம்பி தான் ஆகவேண்டும். இர்மா சூறாவளியின் வலிமையான தாக்கத்தால், கடற்கரை பெருமளவு உள்வாங்கி பஹாமாஸ் கடற்கரை காணாமல் போனது போல காட்சியளிக்கிறது.

பஹாமாஸ் கடற்கரையில் இருந்து கிடைத்த ஒரு காணொளிப்பதிவில் இர்மா சூறாவளி காற்றின் பெருத்த தாக்கத்தால் கடற்கரை பெருமளவு உள்வாங்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.

இந்த வீடியோ பதிவு ட்விட்டரில் ஒருவரால் பதிவு செய்யப்பட்டிருந்தது. அதில் அவர்,"என்னால் இதை நம்ப முடியவேயில்லை. பஹாமாஸ் தீவின் கடற்கரையின் பெரும்பகுதி காணவில்லை. கடல் நீரே கண்ணுக்கு தெரியவில்லை. மிக தொலைவில் தான் கடல் தெரிகிறது #HurricaneIrma" என ட்வீட் பதிவு செய்துள்ளார். இந்த அரிய நிகழ்வு கடந்த வெள்ளிக்கிழமை அன்று நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

ஏறத்தாழ 13 மணி நேரம் கழித்து, சனிக்கிழமை அன்று பஹாமாஸ் கடற்கரை மீண்டும் தனது பழைய நிலைக்கு திரும்பியது. இதை அப்பகுதியை சேர்ந்த Deejayeasya எனும் நபர் புகைப்பட ஆதாரத்துடன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

இர்மா சூறாவளியின் அழுத்தம் நடுப்பகுதியில் குறைவாக இருந்ததால், அது அதிகப்படியான கடல் நீரை நடுப்பகுதிக்கு இழுத்துக் கொண்டது என வானியல் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

இதன் காரணத்தால் தான் வெள்ளியன்று உள்ளிழுக்கப்பட்ட நீர் சனிக்கிழமை வரை பஹாமாஸ் கடற்கரைக்கு திரும்பவில்லை என கூறியுள்ளனர்.!

சுனாமி தகவல் மையம், கடல் அளவு இவ்வளவு உள்வாங்கப்பட்டுள்ளதால், சுனாமி வர வாய்ப்புகள் உள்ளது என அறிவிப்பு வெளியிட்டனர்.

0 comments: