Saturday, 26 August 2017

'கடவுளைத் தவிர யாரும் எங்களை மிரட்ட முடியாது!'- எச்சரித்த தினகரன்

🌍♨டி.டி.வி.தினகரின் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் 19 பேர் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளனர். தற்போது அரங்கேறி வரும் பரபரப்பான அரசியல் சூழலுக்கு மத்தியில் இன்று ஆளுநர் வித்யாசாகர் ராவ் சென்னை வருகிறார். இந்நிலையில் இன்று அடையாறில் செய்தியாளர்களைச் சந்தித்த தினகரன், 'கடவுளைத் தவிர யாராலும் எங்களை மிரட்ட முடியாது' என்று எச்சரிக்கை விடுக்கும் தொனியில் பேசியுள்ளார்.
முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க அணியும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அ.தி.மு.க அணியும் இணைந்தது தமிழக அரசியலில் பல்வேறு திருப்பங்களை ஏற்படுத்தியுள்ளன. அதே நேரத்தில் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள், 'முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது நம்பிக்கை இழந்துவிட்டோம். இதனால் அரசுக்கு அளித்துவந்த ஆதரவை திரும்பப்பெறுகிறோம்' என்று கூறி சில நாள்களுக்கு முன்னர் ஆளுநரை நேரில் சந்தித்து கடிதம் அளித்தனர். இதையடுத்து காங்கிரஸ் உள்ளிட்ட இதர எதிர்க்கட்சிகளும், 'அ.தி.மு.க அரசு சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும்' என்ற கோஷத்தை எழுப்பி வருகின்றனர்.
இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த தினகரன், 'தியாகத்துக்கும் துரோகத்துக்கும் இடையில் நடக்கும் யுத்தத்தில் 19 எம்.எல்.ஏ-க்கள் தியாகத்துக்குப் பக்கத்தில் இருக்கிறார்கள். கடவுளைத் தவிர யாராலும் எங்களை மிரட்ட முடியாது. தியாக உணர்வுடன் 19 எம்.எல்.ஏ-க்கள் தர்மத்தின் பக்கத்தில் நிற்கிறார்கள். நீதிக்காகவே அவர்கள் ஒன்றாக இருக்கிறார்கள். ஆளுநர் ஒரு சட்ட வல்லுநர். அவர் சரியான முடிவெடுப்பார் என்று நம்புகிறோம்' என தெரிவித்தார்

0 comments: