Thursday, 24 August 2017

உருவானது புதிய குழப்பம் - தேறுமா..? தேறாதா? சிக்கலில் எடப்பாடி...!!!

உண்மையில், கட்சியில் ஏற்படும் குழப்பத்தைத் தீர்க்க விரும்பாமல் இந்தக் குழப்பத்தை நீட்டிக்கவே அவர்கள் விரும்புகிறார்கள் என்றே தெரிகிறது.

சட்டமன்றத்திலும், நாடாளுமன்றத்திலும் அதிமுக., அம்மா அணி என்றோ, புரட்சித் தலைவி அணி என்றோ பிரியவில்லை. அதிமுக., பெயரில் தான் சட்டமன்றத்தில் கொறடாவும் (ராஜேந்திரன்), சட்டமன்ற குழுத் தலைவவரும் (எடப்பாடி பழனிச்சாமி) இருக்கிறார்கள். கொறடா ஒரு உத்தரவு போட்டு அதை மீறினார்கள் என்றால், அவர் கட்சித் தாவல் சட்டப்படி, உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியும்.

ஆனால், இந்த விவகாரத்தில், 19 உறுப்பினர்கள் மீது கொறடா எந்த உத்தரவும் போடவில்லை. உத்தரவு போடாமல் அவர் மீறினார் என்று கட்சித் தாவல் தடைச் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கவும் முடியாது. மேலும், அவர்கள் யாரும் கட்சியும் தாவவில்லை.

உள்கட்சி ஜனநாயகம் என்பது கட்சிக்குள் இருக்க வேண்டும் என்பதை எடியூரப்பா வழக்கில் முன்னர் சொல்லப்பட்டது. உள்கட்சிக்குள் குரல் எழுப்புவது என்பது கட்சி ஜனநாயகம் என்பது சொல்லப்பட்டது. கட்சிக்குள் எதிர்த்துக் கருத்து சொல்வது கட்சித் தாவல் தடைச் சட்டத்தில் வராது என்பது 2010 ஆம் ஆண்டில் எடியூரப்பா விவகாரத்தில் தெளிவாக்கப்பட்ட ஒன்று.

ஆனால், தன்னை மீறி, தனக்குத் தெரிவிக்காமல், ஆளுநரிடம் சென்று மனு கொடுத்தார்கள் என்று இவர்கள் சொல்லலாம். ஆனால், ஆளுநரிடம் ஆதரவுக் கடிதம் கொடுக்கும் போதே, ஆதரவு விலகல் எனும் கடிதத்தைக் கொடுப்பதற்கும் அவர்களுக்கு உரிமை உள்ளது என்றுதான் எடுத்துக் கொள்ள முடியும்.

இருப்பினும், இது சட்ட விவகாரங்களுக்கும் வரும் விஷயம் என்பதால், நீதிமன்றத்துக்குச் சென்றால், இது நிச்சயம் பல வருடங்களுக்கு இழுத்துச் செல்லக் கூடும் என்பது நிபுணர்களின் கருத்தாக உள்ளது.

இந்த விஷயத்தில் ஒரே தீர்வு என்பது, அனைத்து உறுப்பினர்களும் அனுசரித்துச் செல்வதுதான். ஆனால், 19 உறுப்பினர்களும் ராஜினாமா செய்யும் பட்சத்தில், உறுப்பினர் எண்ணிக்கை குறையும் என்பதும், எதிர்க்கட்சியினர் நம்பிக்கை வாக்கெடுப்பு கோரினால், இந்த 19 பேர் எண்ணிக்கை குறைந்து, அரசுக்கான பெரும்பான்மை தேவை பலமாக 107 உறுப்பினர் ஆதரவு போதும் என்பதும் ஒரு கணக்காக உள்ளது.

எனவே, இந்த 19 பேர் எடுக்கும் முடிவில்தான், அவர்களின் எதிர்காலம் உள்ளது என்பது கண்கூடு! தங்கள் தலைமீதே தாங்கள் மண்ணை வாறி இறைத்துக் கொள்வார்களா என்ற கேள்வி மேலோங்கி நிற்கிறது.

0 comments: