Thursday, 24 August 2017

26 ஆண்டுகள் சிறைவாசம் கண்ட பேரறிவாளன் - பரோல் வழங்கியது தமிழக அரசு... 

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதான பேரறிவாளனுக்கு தமிழக அரசு பரோல் வழங்கி உத்தரவிட்டுள்ளது.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கு தொடர்பாக சிறையில் இருக்கும் சாந்தன்,முருகன்,பேரறிவாளன்,நளினி உள்ளிட்ட 7 பேர் சிறையில் உள்ளனர்.

கடந்த 26 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருக்கும் பேரறிவாளனை பரோலில் விடுவிக்கக்கோரி மனு அளிக்கப்பட்டது. ஆனால் சிறை நிர்வாகம் அதற்கு மறுப்பு தெரிவித்தது.

இதையடுத்து பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசியல் கட்சிகள் கோரிக்கை விடுத்தன.

இதனிடையே பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் பேரறிவாளனுக்கு பரோல் கோரி நீண்ட நாட்களாக போராடி வந்தார்.
இதனைதொடர்ந்து, சென்னை எழும்பூரிலுள்ள சிறைத்துறை தலைமை அலுவலத்தில் பரோல் தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்த அற்புதம்மாள் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது, பேரறிவாளன் பரோல் தொடர்பான ஆவணங்களை சிறைத்துறை அலுவலத்தில் வழங்கியுள்ளதாகவும்,ஒரு வாரத்தில் பரோல் கிடைக்கும் என நம்புவதாகவும் தெரிவித்தார்.

இந்நிலையில், மானிய கோரிக்கைகள் விவாதம் குறித்த சட்டப்பேரவையில் பேரறிவாளன் பரோல் குறித்து எதிர்கட்சிகள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்து பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பேரறிவாளனுக்கு பரோல் கொடுப்பது குறித்து அரசு பரிசீலனை செய்து வருவதாகவும், 10 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் உள்ளவர்களை விடுவிக்க தலைமை வழக்கறிஞரிடம் ஆலோசித்து முடிவு செய்யப்படும் எனவும் தெரிவித்தார்.

அதன்படி தற்போது, பேரறிவாளனுக்கு பரோல் வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

0 comments: