நாட்டுக்கு உயர்மதிப்பு கொண்ட ரூ.2000, ரூ.500 நோட்டுகள் தேவையில்லை, அந்த நோட்டுகளை ரத்து செய்யலாம் என்று ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு மத்திய அரசுக்கு ஆலோசனை தெரிவித்துள்ளார்.
ஆந்திர மாநிலத் தலைநகர், அமராவதியில் முதல்வர் சந்திரபாபு நாயுடு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியது-
எங்களுக்கு உயர் மதிப்பு கொண்ட, ரூ.2000 நோட்டுகளும், ரூ.500 நோட்டுகளும் தேவையில்லை. சிறிய மதிப்பு கொண்ட ரூ.200, ரூ.100 நோட்டுகளே போதுமானது. டிஜிட்டல் பரிமாற்றத்தையும், ஆன்-லைன் பரிமாற்றத்தையும் அதிக அளவில், மிகப்பெரிய அளவில் மேற்கொள்வோம். இதன் மூலம் ஊழல் முற்றிலும் ஒழிக்கப்படும்.
ரூ.2000, ரூ.500 நோட்டுகள் மட்டும் இல்லாமல் இருந்தால், தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கும் செயல் படிப்படியாக குறைந்துவிடும் என்று தெரிவித்தார்.
பிரதமர் மோடி கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ரூபாய் நோட்டு தடை அறிவிப்பு செய்து, ரூ.500, ரூ.1000 நோட்டுகளை செல்லாது என அறிவித்தபோது அதை சந்திரபாபு நாயுடு வரவேற்றார்.
அது மட்டுமல்லாமல், நாட்டில் டிஜிட்டல் பொருளாதாரத்தையும், டிஜிட்டல் பரிமாற்றத்தையும் ஊக்குவிக்க முதல்வர்கள் தலைமையிலான குழுவை மத்தியஅரசு அமைத்தது. அந்த குழுவுக்கு தலைவராக சந்திரபாபு நாயுடு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments: