2028ஆம் ஆண்டுக்குள் வேலையிட மரணங்களின் விகிதத்தை 100,000 ஊழியர்களுக்கு ஒன்றுக்கும் கீழே குறைக்க சிங்கப்பூர் முயற்சிகளை எடுக்கும் என்று பிரதமர் லீ சியென் லூங் கூறியுள்ளார்.
வேலையிடப் பாதுகாப்பு, சுகாதாரம் குறித்த உலக மாநாட்டில் திரு லீ பேசினார்.
அந்த விவகாரத்தில் சிங்கப்பூர் சந்திக்கும் சவால்கள் சிலவற்றைத் திரு லீ எடுத்துரைத்தார்.
பல மொழிகள், கலாசாரம், வேலையிட நடைமுறைகள் கொண்ட, வெளிநாட்டு ஊழியர்கள் அதிகம் பணிபுரியும் வேலையிடங்களில் விபத்துகள் பல ஏற்படுகின்றன. அத்தகைய இடங்களில் வலுவான பாதுகாப்பு, சுகாதாரக் கலாசாரத்தை உருவாக்குவதில் நிறுவனங்கள் சிரமத்தை எதிர்நோக்குகின்றன.
அதுபோன்ற தொழில்துறைகளில் உள்ள பல நிறுவனங்கள் சிறிய அளவில் செயல்படுவதையும் திரு லீ சுட்டினார்.
வேலையிடச் சுகாதார, பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றுவதற்கான நிர்வாக முறையைக் கையாள்வது அவற்றுக்குச் சவாலாய் இருப்பதாகவும் பிரதமர் லீ சொன்னார்.
அடுத்த 10 ஆண்டுக்கான இலக்குகளை எட்ட, சிங்கப்பூர் நிறுவனங்கள், ஊழியர்கள், அரசாங்கம் என முத்தரப்பும் ஒன்றாகப் பணிபுரிய வேண்டும் என்றார் திரு லீ.
வேலையிடப் பாதுகாப்பை வலியுறுத்த நிறுவனங்களுக்குச் சலுகைகள் வழங்கப்படும். அதற்கான விதிமுறைகளையும் அரசாங்கம் நடைமுறைப்படுத்தும் என்று திரு லீ கூறினார். குறிப்பாக அதிக விபத்துகள் நடக்கும் கட்டுமான, கடல்துறை பிரிவுகளில் மாற்றங்கள் செய்யப்படும்.
மொத்தம் 3,000 ஊழியர்களைக் கொண்ட 300 நிறுவனங்களுக்கு ஆதரவும் ஆலோசனையும் வழங்க உட்லண்ட்சில் சேவை நிலையம் ஒன்றை அரசாங்கம் நிறுவவிருக்கிறது. அந்த முன்னோடித் திட்டம் வெற்றியடைந்தால் மேலும் கூடுதல் நிலையங்கள் தொழிலியல் பகுதிகளில் அமைக்கப்படும் என்று பிரதமர் லீ தெரிவித்தார்.
நிறுவனங்கள் புத்தாக்க முயற்சிகளில் ஈடுபடுவதை ஊக்குவிக்க வேலையிடப் பாதுகாப்பு, சுகாதாரத் தொழில்நுட்ப சவால் ஒன்றும் அறிமுகம் காணும்.
0 comments: