Sunday, 10 September 2017

கத்தாருக்கு மீன் பிடிக்க சென்ற குமரி மீனவர்கள் 5 பேர் அபுதாபியில் சிறை வைப்பு!!

கத்தார் நாட்டிற்கு மீன்பிடிக்க சென்ற குமரி மீனவர்கள் 5 பேர் அபுதாபி சிறையில் வைக்கப்பட்டுள்ளனர்.

குமரி மாவட்டம், கடியப்பட்டணம் கிராமத்தைச் சேர்ந்த ஜெரால்ட் ரீகன் (31), ஜான் பிரபாகரன் (40), ரீகன் ஜியோ கிளாட்வின் (35), கரோலின் ஜாகின் (26) மற்றும் மிடாலத்தைச் சேர்ந்த ஜோஸ் ஸ்டாலின் (32) ஆகிய 5 பேரும் கத்தார் நாட்டிற்கு மீன் பிடிக்க சென்றுள்ளனர். அப்போது, கத்தார் நாட்டின் வக்ரா என்ற இடத்தில், அரேபியாவைச் சேர்ந்த ஜாபர் ஜீபைல் என்பவருக்கும் சொந்தமான சுஸ்வானி3238 என்ற விசை படகில் மீன்பிடிப்பதற்காக கடந்த மாதம் 25ம் தேதி ஆழ்கடல் பகுதிக்கு சென்றுள்ளனர்.

இந்நிலையில், இந்த 5 பேரையும் அபுதாபி கடல் எல்லையை தாண்டியதாக கூறி அபுதாபி கடலோர காவல்படையினர் கைது செய்தனர்.
எனினும், கைது செய்யப்பட்ட 5 பேரும் எங்கே வைக்கப்பட்டுள்ளனர் என்ற தகவலை இந்திய தூதரகத்திற்கும், அவர்களின் உறவினர்களுக்கும் தெரியப்படுத்தவில்லை.

இதற்கிடையில், சிறையில் அடைக்கப்பட்டுள்ள 5 மீனவர்களில் ஒருவரான கரோலின் ஜாகின் கத்தார் நாட்டில் இருந்த இந்திய மீனவரான புரோகின் என்பவருக்கு தொலைப்பேசி வழியாக சிறை வைக்கப்பட்ட்டுள்ளதை தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து இவர்களது உறவினர்கள் உள்பட பலர், தெற்காசிய மீனவர் தோழமையின் பொதுச்செயலாளர் தலைமையில் நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்றுள்ளனர்.
பின்னர் ஆட்சியரை சந்தித்த அவர்கள் அபுதாபியில் சிறை வைக்கப்பட்டுள்ள 5 மீனவர்களையும் விடுவிக்க கோரி மனு அளித்துள்ளனர்.

இது குறித்து மீனவரின் உறவினர் ஒருவர் கூறுகையில், கத்தார் நாட்டிற்கு மீன்பிடிக்க சென்ற 5 பேர் எல்லை தாண்டியதாக கூறி அவர்களை அபுதாபி கடலோர காவல்படையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

இதன் காரணமாக அவர்களின் குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இந்திய அரசு அபுதாபி நாட்டு அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை மீட்டுத்தர வேண்டும் என்று கூறியுள்ளார்.

0 comments: