மறைந்த தமிழக மாணவி அனிதாவின் மரணத்துக்கு நீதி வேண்டியும், நீட் தேர்விற்கு விலக்கு அளிக்கக் கோரியும் தமிழக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மத்திய அரசு கொண்டு வந்த நீட் தேர்வால் மாணவி அனிதாவின் மருத்துவகனவு கலைந்து தற்கொலை செய்து கொண்டார். மாணவி அனிதாவின் மரணம் உலகில் வாழும் அனைத்து தமிழர்கள் இடையேயும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. உலகிலுள்ள பல நாடுகளிலும் மாணவி அனிதாவுக்காகவும், நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்கக் கோரியும் பல்வேறு அமைப்பினரும், போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
விடுமுறை முடிந்து இன்று திங்கள் கிழமை என்பதால், தமிழகத்தின் பல பகுதிகளில் மாணவர்களின் போராட்டம் வெடித்துள்ளது.
இன்று காலை முதலே, மாணவர்கள் நீதிக்கான போராட்டத்தை தங்கள் கைகளில் எடுத்து போராடி வருகின்றனர். இன்று கோவையில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கோரிக்கை முழக்கத்துடன் சாலை மறியல் செய்தனர்.
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் 2000க்கும் மேற்பட்ட மாணவர்கள் அனிதா மரணத்துக்கு நீதிகேட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
நெல்லையில் சட்டக்கல்லூரி மாணவர்கள் மற்றும் அரசு பொறியியல் கல்லூரி மாணவர்கள் அனிதாவின் மரணத்துக்கு நீதி கேட்டும், , நீட் தேர்விற்கு விலக்கு கேட்டும் போராட்டத்தில் குதித்தனர்.
திருவள்ளூர், பொன்னேரியில் உள்ள அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் 200-க்கும் மேற்பட்டோர் மத்திய அரசு மற்றும் நீட்டுக்கு எதிராக ரயில் மறியலில் ஈடுபட்டனர்.
மாணவி அனிதாவின் மரணத்திற்கு நீதிகேட்டு திருவாரூர் , திருத்துறைப்பூண்டி அரசு கல்லூரி மாணவர்கள் 500-க்கும் அதிகமானோர் பேரணியாக சென்று போராட்டம் நடத்தி வருகின்றனர்.
திருச்சி மாவட்டத்தில் நீட் தேர்வை ரத்த செய்யக் கோரியும் அனிதாவின் மரணத்துக்கு நீதி கேட்டும் 5 மாணவர்கள் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் தலைநகர் டெல்லியிலும் அனிதாவுக்கு ஆதரவாக மாணாவர்கள் போரட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அமெரிக்காவின், வாஷிங்டன், சிலிக்கன்வேலி, அட்லாண்டா, பிரிமாண்ட் ஆகிய இடங்களிலும் போராட்டங்கள் நடைபெற்றன.
தமிழகத்தின் கடலூர், கிருஷ்ணகிரி, திருச்சி, திருவள்ளூர், புதுக்கோட்டை, அரியலூர், நாகைப்பட்டினம் ஆகிய இடங்களில் மாணவர்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். மற்றும் புதுச்சேரியில், அனிதாவின் மரணத்துக்கு நீதி வேண்டியும், நீட் தேர்வுக்கு விலக்கு வேண்டியும் ஆளுநர் மாளிகையை மாணவர்கள் முற்றுகையிட்டுனர்.
0 comments: