Friday, 1 September 2017

அனிதாவின் மரணம்.. மத்திய அரசும், தமிழக அரசும் கூட்டுக் குற்றவாளிகள்.. இளந்தமிழகம் இயக்கம்

சென்னை : மாணவி அனிதாவின் மரணத்திற்கு மத்திய, மாநில அரசுகள் கூட்டுக்குற்றவாளிகள் என்று இளந்தமிழகம் இயக்கம் குற்றஞ்சாட்டியுள்ளது.
இது தொடர்பாக அந்த இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ராசன் காந்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :

நீட் தேர்வுக்கு எதிராக உச்ச நீதிமன்றம் வரை சென்று போராடிய மாணவி அனிதா தற்கொலை செய்து கொண்டுள்ளார். தமிழ்நாடு அரசின் பாடத்திட்டத்தில் படித்து 1200 - க்கு 1176 மதிப்பெண்கள் பெற்ற அனிதா, நீட் தேர்வால் தன்னுடைய மருத்துவக் கனவு மட்டுமின்றி, தமிழக மாணவர்கள் அனைவரின் மருத்துவக் கனவும் பொய்யாகிவிடும் என்று உணர்ந்து உச்ச நீதிமன்றம் வரை சென்று போராடியவர்.
நீட் தேர்வில் இருந்து, தமிழ்நாட்டிற்கு விலக்கு கிடைத்துவிடும் என்று தமிழக மாணவர் சமுதாயம் மிகுந்த நம்பிக்கையுடன் இருந்தது. " இதோ கிடைத்துவிடும், அதோ கிடைத்துவிடும்" என்று தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கரும், மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனும் காட்டிய கண்ணாமூச்சி இன்று கல்வியில் சிறந்து விளங்கிய மாணவி ஒருவரின் உயிரைப் பறித்துவிட்டது.

மாநிலங்களின் கல்வி உரிமையைப் பறித்து, தமிழ்நாட்டு மாணவர்களின் மருத்துவர் கன‌வைக் குழி தோண்டி புதைத்துவிட்டு இந்திய அரசும், தமிழ்நாட்டு அரசின் பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களின் நலன்களைக் காத்து நிற்காமல் பதவிப் பேரத்திலேயே ஆட்சியை நகர்த்தும் தமிழக ஆட்சியாளர்களும் மாணவி அனிதாவின் தற்கொலைக்கு காரணமானவர்கள், கூட்டுக் குற்றவாளிகள்.
இவ்வாறு ராசன் காந்தி கூறியுள்ளார்.

0 comments: